பாமகவிற்கு கும்மிடிப்பூண்டி: அதிமுகவினர் சாலை மறியல்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு கும்மிடிப்பூண்டி ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி; 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் கும்மிடிப்பூண்டி அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் வியாழக்கிழமை 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார். ஒரு இடைதேர்தல் மற்றும் 2 சட்டமன்ற தேர்தல்கள் என இதுவரை கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 முறை எம்எல்ஏ ஆக இருந்தவர்.
அதிமுகவிற்கு ராசியான தொகுதியாக கருதப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இதுவரை 8 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வென்றுள்ள நிலையில், அதிமுகவின் ராசியான இந்த தொகுதியில் இம்முறையும் அதிமுகவே போட்டியிடும் என அதிமுகவினர் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எளிதில் வெல்லக்கூடிய ராசியான தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதே என கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுகவினர் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.விஜயகுமாரின் மகள் கே.எஸ்.வி.சஞ்சனா தலைமையில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை கட்சி கொடியேந்தி ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுட்டனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இரண்டே நாளில் தொகுதி கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.