பள்ளி மாணவர்களின் கடுக்கனை கழட்டி நன்னெறி வகுப்பெடுத்த காவல்துறையினர்
மானாமதுரையில் வாகன சோதனையின் போது காதில் கடுக்கன், வளையம், இரும்பு சங்கிலி உள்ளிட்டவற்றை அணிந்து வந்த பள்ளி மாணவர்களை அதனை கழட்ட வைத்து போலீசார் நன்னெறி வகுப்புகள் நடத்தி அனுப்பி வைத்தனர்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாகன சோதனையின் போது காதில் கடுக்கன், வளையம், இரும்பு சங்கிலி உள்ளிட்டவற்றை அணிந்து வந்த பள்ளி மாணவர்களை அதனை கழட்ட வைத்து போலீசார் நன்னெறி வகுப்புகள் நடத்தி அனுப்பி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனைகள் நடந்து வருகின்றன. மானாமதுரை பைபாஸ் ரோட்டில் துணை தாசில்தார் சேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அரசு உதவி பெறும் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் காதில் தோடு, வளையம், கழுத்தில் வன்முறையை காட்டும் சில்வர் மற்றும் பாசி சங்கிலி ஆகியவற்றை அணிந்தததுடன் சட்டையின் மேல் பட்டனை திறந்து விட்டபடி சாலையில் வந்தனர்.
சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்த போது சிறப்பு வகுப்புகளுக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் படிக்கும் வயதில் இது போன்று தோடு, சங்கிலி அணிந்து செல்வது தவறு, நாங்கள் படிக்கும் காலத்தில் வகுப்பு ஆசிரியர்கள் இதுபோன்று அணிந்து வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள், பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளில் இதுபோன்ற செயல்கள் தவறு என சொல்லி கொடுப்பார்கள், எனவே படிக்கும் வயதில் இதுபோன்ற அணிகலன்கள் வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கும் என அறிவுறுத்தியதுடன் அவர்களிடம் இருந்த தோடு, சங்கிலி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து குப்பையில் வீசினர்.
படிக்கும் வயதில் படிப்பை தவிர வேறு சிந்தனை ஏதும் தோன்ற கூடாது என அறிவுறுத்தியதை அடுத்து மாணவர்கள் அதனை ஏற்று கொண்டு சிரித்தபடியே சென்றனர்.