முகப்பு
தமிழ்நாடு

அனைத்து ரயில்களையும் இயக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட  உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
அனைத்து ரயில்களையும் இயக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு
பகிர்:

சென்னை: கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட  உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ரயில் போக்குவரத்து தற்போது 65 சதவீதம் மட்டுமே  நடைபெற்று வருகிறது. அனைத்து ரயில்களும் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.

ரயில் போக்குவரத்து  படிப்படியாக மட்டுமே மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஆனால் விமானப் போக்குவரத்து 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. 

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் 100 சதவீதம் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் ரயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்படவில்லை.

பேருந்துகளை ஒப்பிடும்போது ரயில்களின் கட்டணங்கள் குறைவு. போதுமான ரயில்கள் இயக்கப்படாததால், வியாபாரிகள் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அதிகக் கட்டணம் செலுத்தி பிற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.

சமூக இடைவெளி,  முகக்கவசம் அணிவது போன்ற கரோனா  தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரயில்களை முழுமையாக இயக்கக் கோரி ரயில்வே துறைக்கு மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே புறநகர் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த வாரம் முதல் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினாலும், புறநகர் ரயில்களில் அவற்றை பின்பற்ற செய்ய முடியாது. கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது. எனவே ரயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது என மறுத்து விட்டனர். ரயில்வே நிர்வாகம் இதுதொடர்பாக நிபுணர்களை கலந்தாலோசித்து  முடிவெடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் அல்லது தொற்றுப் பரவல் குறைந்தால் மனுதாரர் இதேக் கோரிக்கையை எழுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டுதான் நீதிமன்றங்களை திறக்கும் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →