கமல் பிரசாரத்துக்கு கால் கட்டு போட்ட காயம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் காலில் வலி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரத்திலிருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் காலில் வலி ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பிரசாரத்திலிருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவையில் முகாமிட்டுள்ள கமல்ஹாசன், நாள்தோறும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக்கொள்வது, உரையாடுவது, கை குலுக்குவது உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறுவது வழக்கமாக இருந்து வந்தன.
இந்த நிலையில் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கமல்ஹாசனின் காலை மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கமல்ஹாசனுக்கு எக்ஸ் ரே எடுக்கப்பட்டது.
இதுபற்றி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு வருவதாகவும் கூறினர்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கமல்ஹாசனின் வலது கால் எலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதே காலில் சனிக்கிழமை காயம் ஏற்பட்டதால் அவர் கட்டாய ஓய்வெடுத்து வருகிறார். இதனால், அவரது பிரசார திட்டங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படவுள்ளன.