ஸ்ரீவில்லிபுத்தூர்: நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை காலை வந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.28) மாலை நடைபெற உள்ளது
திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சிகள் கடந்த 20 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது இதை தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி உள்ளனர்
இந்நிலையில், திருக்கல்யாணத்தின் போது ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் வருவது வழக்கம். அந்தப் பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிந்து கொள்வார்
இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து சனிக்கிழமை காலை பட்டு வஸ்திரம் வந்தது. அந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் ஊழியர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்திடம் இருந்து பட்டு வஸ்திரத்தை ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.