திருச்சுழியில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் பேரணி
திருச்சுழியில் பேருந்து நிலையச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமை வகித்தார்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சுழி பேருந்து நிலையச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களும், சுகாதாரத்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட மனிதச்சங்கிலி நிகழ்ச்சியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தல், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல ஆகிய வாசகங்களடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியவண்ணம், அவ்வாசகங்களை முழக்கமிட்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்
Advertisement
அதையடுத்து வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கண்ணன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அப்பேரணியானது திருச்சுழி ஊராட்சியின் முக்கியப்பகுதிகளான பேருந்து நிலையம், அருப்புக்கோட்டை செல்லும் சாலை, காரியாபட்டி செல்லும் சாலை ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது. அப்போது, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் முழக்கமிடப்பட்டன.
உடன் இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஊழியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.