திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயர் அலுவலர்கள் சந்திப்பு இன்று (மே 3) இரவு நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் இருந்தனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு உயர் அதிகாரிகளுடன் எனது இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
கரோனா நோயாளிகளுக்கு வழங்கும் ரெம்டெசிவிர் மருந்தை தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், மருந்து போன்றவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.