வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி செங்கல் சூளையின் தொழிலாளி ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோரப் பகுதியில் ஆங்காங்கே மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த இடி, மின்னல் காற்றுடன் லேசான மழை பொழிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், அவரிக்காடு ஊராட்சி, வைணவன்பேட்டை பகுதியில் அமைந்த தனியார் செங்கல் தயாரிப்பு சூளை அமைந்துள்ள பகுதியில் பலத்த இடி, மின்னல் ஏற்பட்டது.
இங்கு தற்காலிகக் கூடாரம் அமைத்து குடும்ப உறுப்பினர்களுடன் தங்கி வேலை பார்த்த தலைஞாயிறு, வேளாணிமுந்தல் தெருவைச் சேர்ந்த ப. காளிதாஸ் (55) மீது மின்னல் பாய்ந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது உறவினர் மகனான (பெயரன்) விஷ்வாவுக்கு (4) லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.