தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!
தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க, சமூக இடைவெளியின்றி கடைகள்தோறும் மக்கள் குவிந்தனர்.
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க, சமூக இடைவெளியின்றி கடைகள்தோறும் மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த 10 ஆம் தேதி முதல் நாளை வரை சில தளர்வுகளுடன் அரசு ஊரடங்கை அறிவித்தது. இந்நிலையில், நாளை (திங்கள்கிழமை) முதல் வரும் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.
அதையடுத்து, நேற்றும், இன்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசியக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தம்மம்பட்டியில் நேற்று பிற்பகல் முதல் இரவு 9 மணி வரையும், இன்று காலை 5 மணி முதலே காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், கால்நடை தீவனக் கடைகள், இறைச்சி கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் என, அனைத்துக் கடைகளிலும், ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கி வைக்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்தனர்.