மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
பல மாநிலங்களில் மத்தியில் எதிர்க்கட்சிகளாக உள்ளவற்றுக்கு நிகராக சம பலத்தை வெளிப்படுத்தி தனக்கான முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி சாதகமாக்கிக்கொண்டுள்ளது.
நமது சிறப்பு நிருபர்
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 37 இடங்களுக்கு அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கு அக்கூட்டணியின் ஒற்றுமை, நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட வியூகம் மற்றும் கட்சி மாறி வாக்களித்த சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் உதவியுள்ளன. பல மாநிலங்களில் மத்தியில் எதிர்க்கட்சிகளாக உள்ளவற்றுக்கு நிகராக சம பலத்தை வெளிப்படுத்தி தனக்கான முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி சாதகமாக்கிக்கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் 10 மாநிலங்களில் காலியாகப் போகும் 37 இடங்களுக்கான தேர்தலில் 26 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மீதமுள்ள 11 இடங்களுக்கான வாக்குப்பதிவு, மத்தியில் ஆளும் கூட்டணியின் முறையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்ற நடவடிக்கைகளால் பாஜக அணிக்கு எண்ணிக்கை பலம் கைகூடியிருக்கிறது.
வரும் ஏப்ரலில் பிகாரில் ஐந்து இடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தலைத் தங்களுடைய ஒருங்கிணைப்புக்கான ஆய்வுக்களமாக பாஜக அணி பயன்படுத்திக் கொண்டுள்ளது. அங்கு முதல்வராக உள்ள நிதீஷ் குமார், பாஜக தேசியத் தலைவரான நிதின் நபின் ஆகியோரும் தேர்தல் களத்தில் போட்டியிட்டதால் காலியாகப்போகும் ஐந்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி முழுத் திறனையும் வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மூன்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் ஓர் உறுப்பினர் வாக்கெடுப்பை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இப்படிச் செய்ததன் பலன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மறைமுகமாக கிடைத்து அதன் வெற்றிக்கு வழிவகுத்தது. ஐந்தாவது தொகுதியில் களம் கண்ட ஆர்ஜேடி வேட்பாளர் ஏ.டி. சின்ஹா வெற்றிக்கு வெகு அருகே சென்றும் தோல்வி அடைய அவரது கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது முக்கியக் காரணமாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரையில், பிகாரில் சுமார் அதன் 202 பேரவை உறுப்பினர்களும் மிகவும் ஒழுக்கத்துடன் கட்சிக்கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டு களத்தில் முன்னிறுத்தப்பட்ட தங்கள் அணி வேட்பாளருக்கே வாக்குகளைச் செலுத்தினர். மாறாக, எதிர்க்கட்சியான இண்டி கூட்டணியில் இந்த ஒருங்கிணைப்போ, ஒத்துழைப்போ காணப்படவில்லை.
கட்சி மாறி வாக்களிப்பது, வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகள் பிகாருடன் நின்றுவிடவில்லை. ஒடிஸôவிலும் தொடர்ந்தது. அங்கு தங்களுடைய உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றதாக பிஜு ஜனதா தளம் கட்சி பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியது.
ஹரியாணாவில் காலியாகும் இரண்டு இடங்களுக்கு பாஜகவின் ஆட்சேபம் மற்றும் இண்டி கூட்டணியின் சில உறுப்பினர்களின் வாக்கெடுப்புப் புறக்கணிப்பையும் மீறி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
எங்கெல்லாம் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியும் ஆட்சியில் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தேர்தல் விதிமீறல் புகார்கள், சில உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்தது, கட்சி மாறி வாக்களித்த செயல்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வென்று தங்களுடைய அணியின் பலத்தை மேலும் வலுப்படுத்த காரணமாகியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் நாளில் காலியாகும் 37 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 21 முதல் 22 இடங்கள் வரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 133 அல்லது அதற்கும் அதிகமாகலாம்.
எதிர்க்கட்சிகள் கட்சி மாறி வாக்களித்தது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பாஜக அணி விதிமீறல்களில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
தேர்தல் முடிவானது, வெறும் எண்ணிக்கை பலத்தை மட்டுமின்றி, கூட்டணி ஒருங்கிணைப்பு, வியூக ரீதியிலான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்டுக்கோப்புடன் வாக்குப்பதிவில் தங்கள் அணி உறுப்பினர்கள் ஈடுபட்டதை உறுதி செய்தல் போன்றவற்றிலும் பிரதிபலித்ததால் இது பாஜக அணிக்கு சாதகமான தேர்தல் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
இந்தத் தேர்தல், மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவாக ஆதிக்கம் செலுத்தவும், இனி வரும் நாடாளுமன்ற மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க ஆளும் கூட்டணிக்கு புதிய பலத்தைக் கொடுக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.