கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...
ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததால் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் 27 இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலில் 24 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும், மிசோரமில் ஒரு இடத்திற்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், ஜார்க்கண்டில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் வேட்பாளர் பிரணவ் ஜாவ்வும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) வேட்பாளர் பைத்யநாத் ராம் இருவரும் களமிறக்கப்பட்டனர். பிரணவை எதிர்த்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி நிறுத்தப்பட்டார்.
Advertisement
Advertisement
81 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 24 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் இடம்பிடிக்கத் தேவையான 28 வாக்குகளைவிட நான்கு வாக்குகள் குறைவு. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் 56 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட பைத்யநாத் ராம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து, மற்றொரு இந்தியா கூட்டணி வேட்பாளரான பிரணவ் ஜாவ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நத்வானிக்கு, கட்சி மாறி வாக்களித்து வெற்றி பெற வைத்தது தெரிவந்தது. மூன்று வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் வாக்களித்துள்ளனர்.
பைத்யநாத் ராம் 30 வாக்குகளையும், பரிமல் நத்வானி 28 வாக்குகளையும், பிரணவ் ஜாவ் 20 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே 2008 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த பரிமல் மீண்டும் மூன்றாவது முறையாகத் தேர்வாகியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்த சமபவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.