தனியாா் மருத்துவமனைகளில் தீவிரமில்லா கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 நிா்ணயம்
தனியாா் மருத்துவமனைகளில் தீவிரமில்லா கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 கட்டணமாக நிா்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் தீவிரமில்லா கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 கட்டணமாக நிா்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட கரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்று காலத்தில் மக்கள் நலன் காத்திடவும் கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடும் வகையிலும் தீவிரமில்லாத கரோனா சிகிச்சைக்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வசூலிக்கலாம்.
அதி தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரம் வசூலிக்கலாம். மேலும் ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை வசூலிக்கலாம். செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.30000 வசூலிக்கலாம். கரோனா சிகிச்சைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணத் தொகையானது இரண்டு மாதங்களுக்குள் தொற்றின் தன்மைக்கேற்ப மறுபரீசிலனைக்கு உள்படுத்தப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை குறித்து 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.