காய்கறி, மளிகைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
காய்கறி, மளிகைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
காய்கறி, மளிகைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் முழுமுடக்கம் அமலாவதால் காய்கறி, மாளிகைப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.10 க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.50 ஆகவும், உருளைகிழங்கு ரூ.30 லிருந்து ரூ.60 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. 5 கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.50க்கும், ஒரு கிலோ ரூ.7க்கும் விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே காய்கறிகள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
காய்கறி, மளிகைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படாதவாறு வணிகர்கள், கடைக்காரர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மளிகைக் கடைகளிலும் பொருள்கள் அதிக விலைக்கு விற்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. வணிகர்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உரிய விலையில் பொருள்களை விற்க வேண்டும்.
நாளை முதல் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள் விற்கப்படும்.
முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும்.
கரோனா நிவாரண நிதி ரூ. 2,000 தொகை 96.4% மக்களைச் சென்றடைந்துள்ளது என்றார்.