உத்தமபாளையம் : தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கம் தொடர் மழையால் நிரம்பிய மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராயப்பன்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 52.5 அடி உயரம் கொண்ட இந்த நீர் தேக்கத்தில் பருவமழை காலங்களில் ஹைவேவிஸ் மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
இதையும் படிக்க | ‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’
இந்த நீர்த்தேக்கத்தின் மூலமாக சுற்றியுள்ள ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி அப்பிபட்டி மற்றும் ஓடைப்பட்டி வரையில் சுமார் 1700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை புதன்கிழமை காலை 5 மணியளவில் எட்டிய நிலையில், தொடர்ந்து நீர் வரத்தால் அணையிலிருந்து உபரி நீர் மறுகால் பாய்கிறது.
11 மாதங்களுக்கு பின் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.