கம்பம்: முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட வந்த நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் காரை மறித்த 5 மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையை தேனி மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை பார்வையிட கம்பம் வழியாக வந்தார்.
இதையும் படிக்க | மகளிருக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள் - ஓர் அறிமுகம்
கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி முன்பாக 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் தலைமையில் 50க்கும் மேலான விவசாயிகள் கூடியிருந்தனர்.
அமைச்சரை முற்றுகையிடப் போவதாக தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் காவல் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா விவசாயிகளிடம் கலைந்து செல்லுங்கள், மறியல் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதற்கு விவசாயிகள் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அமைச்சர் வந்த காரை விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமையில் மறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில், பெரியாறு அணைக்கு வரும் நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், பெரியாறு அணையில் தமிழக காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட வேண்டும், அணை நிர்வாகம் தேனி மாவட்ட ஆட்சியரின் பொறுப்பில் வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளை கெடுபிடி செய்யாமல் வல்லக்கடவு வழியாக அனுப்ப வேண்டும்,
அணை பற்றி வலைதளங்களில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது கேரள முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார், அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
விவசாயிகள் கொடுத்த மனுவை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்வதாக கூறினார்.