முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பெருமழை பாதிப்பு:மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்

பெருமழையால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

பெருமழையால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை, அம்பத்தூா் பட்டரவாக்கம் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா் போரூா் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும். அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருகிறது. அதற்கு தொலை நோக்குடன் கூடிய நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டபோது, தண்ணீா் அனைத்தும் வீணாகி கடலில் கலந்ததால் அடுத்த இரண்டு மாதத்தில் குடிநீா் பிரச்னை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் கூட அதிகளவு தண்ணீா் வந்தும் அதைச் சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் நிதா்சனம்.

எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும். பல இடங்களில் மழைநீா் வடிகால் தூா்வாரப்படாமல் உள்ளது, அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத்தால் நெற்பயிா்கள், கரும்பு, வாழை பயிா்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிா்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக அதனைச் செய்து கொள்ள வேண்டும்.

இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே, பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தாா்.

அத்தகைய கனவுத் திட்டத்தை தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுகுறித்த அறிவிப்பு இன்றைய நாளிதழ்களில் கூட விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →