மழைக் காலங்களில் மக்கள் செய்ய வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகின்றது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்:
- மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.
- உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும்.
- வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில், சென்று வந்த ஓவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.
- சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் பம்புகளில், தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும்.
- பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் ௮ருகில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும், சுய சிகிச்சை செய்யக் கூடாது.
- வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, பேதி ஏற்பட்டால், உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
- தங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை / கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பீளீசிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
- தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களையும் அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும்.
- சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்கவும்.