கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர்-கம்பம் பிரதான சாலையில் உள்ளது கண்ணகி நகர். இங்கு அடிக்கடி மின்சாரத் தடையும், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவுகிறது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெண்கள், காலிக் குடங்களுடன் கூடலூர்-கம்பம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.முத்துமணி விரைந்து வந்து மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நகராட்சி ஆணையாளர் சேகரிடம் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தார். மேலும், மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடமும் பேசி மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்ததன் பேரில் மறியல் செய்த பெண்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.