வினாடி வினா போட்டி: அரபு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
கல்வித்துறை நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டி நிதியுதவி அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்: கல்வித்துறை நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவனை பாராட்டி, நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி இன்று (நவ.23) நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீரதீரன். கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றார்.
இதையடுத்து, தமிழக அரசால் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். நேரில் சென்ற மருதூர் ரோட்டரி சங்கத்தினர் சால்வைகள் அணிவித்து மாணவனை பாராட்டினர். குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு செலவுக்கு உதவியாக நிதியும் வழங்கப்பட்டது.
Advertisement
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில், இலக்குவன், அண்ணாதுரை, பிரண்ஜ் கோபால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.