முகப்பு
தமிழ்நாடு

இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

சென்னை மற்றும் அதனை சுற்றி 100 கி.மீ. தொலைவுப்பகுதிக்கு இன்று மிகவும் உகந்த நாள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

Updated On : 23 நவம்பர், 2021 at 10:06 AM
இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
பகிர்:

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் அதனை சுற்றி 100 கி.மீ. தொலைவுப்பகுதிக்கு இன்று மிகவும் உகந்த நாள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

அதற்கு புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார். 

பொதுவாக தமிழ்நாடு வெதர்மேன் இன்று மிகச் சிறந்த நாள் என்று சொன்னால் அது மழைக்கான வாய்ப்பாகத்தான் இருக்கும். எனவே, என்னடா? சென்னையில் இன்று மழை பெய்யப் போகிறதா என்று யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம். அவர் இணைத்திருக்கும் புகைப்படத்தில் இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று சூரிய வெளிச்சம் வரும். துணிகளை உலர்த்த மிகச் சிறந்த நாள் என்று புகைப்படத்துடன் விளக்கியுள்ளார்.

Advertisement

இரண்டாவதாக ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதை விளக்கும் படம். அதற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம், தென் தமிழகத்தில் அடுத்தச்சுற்று மழை இன்று முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மேலடுக்கு சுழற்சியானது, தென் தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், இதர தெற்கு கேரள பகுதிகளில் இன்று மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது, மேற்கு-வட மேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை-தென்தமிழகம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்கெனவே இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாகி வலுவடைந்து, சென்னைக்கு அருகே கரையை கடந்து சென்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை - தென் தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.