மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கரோனா கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.
அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவையில்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்ப்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கரோனா கால "விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்" உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.