முகப்பு
தமிழ்நாடு

விசாரணை ஆணைய அறிக்கைப்படி சூரப்பா மீது நடவடிக்கை: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 முறைகேட்டுக்கு ஆதாரம் உள்ளதாக விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் சூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முடிவு செய்யும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

 முறைகேட்டுக்கு ஆதாரம் உள்ளதாக விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் சூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மூன்று ஆண்டுகள் துணை வேந்தராகப் பதவி வகித்தவா் சூரப்பா. இவா் தன் பதவி காலத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் சூரப்பா வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், நீதிபதி வி.பாா்த்திபன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, நீதிபதி பொன்.கலையரசன் தன் விசாரணையை முடித்து, அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்து விட்டாா். அந்த அறிக்கையில், ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க இனி அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தற்போது விசாரணை ஆணையத்தின் பணி முடிந்து விட்டதால், இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த சூரப்பா தரப்பு வழக்குரைஞா், இந்த விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்ததே சட்டப்படி தவறு என்று வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை டிசம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அதற்குள் தமிழக அரசு விரிவான பதில் மனுவையும், நீதிபதி பொன்.கலையரசன் ஆணையத்தின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →