வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை(நவ.29) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் செவ்வாய்கிழமை(நவ.30) ஆம் தேதி உருவாகிறது.
இதையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருமுல்லைவாயல், கணபதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு
அவருடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர், பூவிருந்தவல்லி அம்மன் கோவில் தெரு, காவலர் குடியிருப்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதையடுத்து, மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.