தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்ததில் தந்தை-மகன் உயிரிழந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள அகரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணன் (50). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி பழனியம்மாள், மகன்கள் அருண்குமார், பிரேம்குமார் (22), மகள் ஹேமா.
இவர்களில் பிரேம்குமார் பொறியியல் படித்துவிட்டு திருச்சியிலுள்ள தொழிற்சாலையில் தொழில் பழகுநராக வேலை பார்த்து வந்தார்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த துரைக்கண்ணன் மகன் பொறியியல் பட்டதாரி பிரேம்குமார்.
அகரப்பேட்டையில் சனிக்கிழமை மாலையும் இரவும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாசலில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த துரைக்கண்ணன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றார்.
அப்போது வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை துரைக்கண்ணன் மிதித்து விட்டார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமார் வெளியே வந்து தனது தந்தையைக் காப்பாற்ற முயன்றார். இதனால் துரைக்கண்ணனும், பிரேம்குமாரும் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.