காலிப்பணியிடங்களை நிரப்ப கருவூல கணக்குத் துறை அலுவலர்கள் கோரிக்கை
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அவிநாசி: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் அவிநாசி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில தலைவர் கோ.சுசீந்தரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் து.ஆனந்தன், துணைத் தலைவர் கி.செந்தில்குமார், செயலாளர் ம.சரவணபிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா. சண்முகராஜன், மாநில கௌரவத் தலைவர் க.பாலசுப்ரமணியன், மாநில பொது செயலாளர் க.ஜெய்சங்கர், துணை பொது செயலாளர் எஸ்.வெங்கட்ரமணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதையும் படிக்க | புதுப்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு
கூட்டத்தில், கூடுதல் கருவூல அலுவலர் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பதவி உயர்வு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், காசாளர், கணக்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதிய வட்டங்களில், புதிய சார்நிலை கருவூலங்களை தோற்றுவிக்க வேண்டும். "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' , "அசிஸ்டென்ட் புரோக்ராமர்' பணி செய்வோரை, ஆகியோரை கருவூல துறையிலேயே நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.