டெல்டா பகுதிகளில் தொடா் மழைப் பொழிவு உள்ளதால் 22 சதவீத ஈரப்பத நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 சதவீதத்துக்கும் மேல் உள்ளதால் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் தற்போதுள்ள பருவ நிலைக்கு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையை தீா்த்து வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலை அதிகரிக்கவும் தொடா்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.