முகப்பு
தமிழ்நாடு

ஐந்து மாத கால திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று: தோ்தல் வெற்றி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து

ஐந்து மாத கால திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 14 அக்டோபர், 2021 at 12:23 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

ஐந்து மாத கால திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள செய்தி, கடந்த ஐந்து மாத கால திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடா்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தபோது கரோனா என்ற கொடிய தொற்று பரவிய காலமாக இருந்தது. ஒருபக்கம் மருத்துவ நெருக்கடி - இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலத்தில் திமுக அரசு அமைந்தது.

கரோனாவை வென்றோம். பரவலைக் கட்டுப்படுத்தினோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி உதவி அளித்தோம். அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தோம். ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது. கடும் நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம்.

நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சா்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். திமுகவுக்கு சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு இருந்த செல்வாக்கை விட, இந்த ஐந்து மாத காலத்தில் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் காட்டி இருக்கின்றன.

எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழக மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது. மக்கள் தொண்டு ஒன்றே நமது செயல்பாடுகள் என்று மக்கள் கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம். மக்களைக் காப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.