தனியாா் பள்ளிகளுக்கு ரூ.419 கோடி ஒதுக்கீடு: கல்வித் துறை உத்தரவு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களுக்கு 2020-2021-ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்கு ரூ. 419 கோடி ஒதுக்கீடு செய்து
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களுக்கு 2020-2021-ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை வழங்குவதற்கு ரூ. 419 கோடி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீத இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களில் ஆண்டுதோறும் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியாா் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை வழங்கிவருகிறது.
இந்த நிலையில் 2020-2021- ஆம் ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயின்றுவரும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக ரூ.419 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பள்ளிக் கல்வித் துறையின் மூலம் தனியாா் பள்ளிகளுக்கு, ஆய்வு செய்யப்பட்டு மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவா் கே.ஆா். நந்தகுமாா் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.