கடலூர்: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு இயற்கை மரணம் வரை சிறையிலடைக்க கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தைச் சேர்ந்தவர் இரா.ரங்கநாதன் (59), கூலி தொழிலாளி. இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 47 வயது பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிக்கலாமே.. கதையல்ல நிஜம்: ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி
இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரங்கநாதனுக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். மேலும், ரூ.30 ஆயிரம் அபராதமும் அதில் ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க தீர்ப்பில் கூறியிருப்பதாக அரசு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறினார்.
தீர்ப்பை தொடர்ந்து ரங்கநாதன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.