சங்க இலக்கிய வாழ்வியல்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சங்க இலக்கிய வாழ்வியல், திராவிடக் களஞ்சிய நூல் வெளியிடுவது பற்றி தவறான தகவல் பரப்படுவதாக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சங்க இலக்கிய வாழ்வியல், திராவிடக் களஞ்சிய நூல் வெளியிடுவது பற்றி தவறான தகவல் பரப்படுவதாக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்க இலக்கிய வாழ்வியலை நூலாக வெளியிடுதல் மற்றும் திராவிடக் களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாகச் சில தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன.
தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள 10 ஆவது அறிவிப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டது முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பது இரண்டாவது அம்சம் கால்டுவெல் தொடங்கி எமனோ, பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்துக் கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்துத் திராவிடக் களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடப்படும் என்பதாகும்.
மேற்சொன்ன இரண்டு பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள். எனவே, அறிவிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.