முகப்பு
தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம் பிரதிஷ்டை: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

சாஸ்த்ரா நிறுவனத்தால் காணிக்கையாக வழங்கப்பட்ட 5 கிலோ தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு தகடுகள் பதித்திடும் பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு

Updated On : 3 செப்டம்பர் 2021, 11:05 am IST
தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு தகடுகள் பதித்திடும் பூர்வாங்க பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
பகிர்:

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் , சாஸ்த்ரா நிறுவனத்தால் காணிக்கையாக வழங்கப்பட்ட 5 கிலோ தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு தகடுகள் பதித்திடும் பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது . இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது  குருமகாசன்னிதானம் பங்கேற்றார்.

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். 

இக்கோயிலில், வைத்தியநாத சுவாமி சன்னதி நோ் எதிரே உள்ள கொடிமரத்துக்கு தங்க தகடுகள் பதிக்கும் திருப்பணியை தஞ்சாவூா் சாஸ்தா பல்கலைகழகம் வேந்தா் சேதுராமன் செய்திடும் வகையில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்க முன்வந்தாா்.

Advertisement

Advertisement

அதன்படி, அந்த 5 கிலோ தங்க கட்டிகளை சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் சேதுராமனின் மகன் வைத்தியசுப்ரமணியன் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகளிடம் வழங்கினாா். இந்த தங்க கட்டிகள் தகடுகளாக பதிக்கும் பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் கொடி மரத்திற்கு தங்க ரேக்குகள், அடிப்பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக தாமரை வடிவான தங்க பத்ம பீடத்தினை கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க ரேக் மற்றும் தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. 

இதில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அப்போது கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார்.

வரும் புதன்கிழமை (செப்.8)எட்டாம் காலை தங்கக் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.