இணையம் மூலம் மது விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியது:
இணைய மூலம் அரசு மது விற்பனை செய்யப் போவதாகக் கூறினாா்கள். அது தவறான தகவல். இணைய மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 5,425 ஆகும். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கா்நாடகத்தில் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழகத்தில் மூடியிருந்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாா்.