முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உணர்ச்சிகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உணர்ச்சிகளை  மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உடன் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் உள்ளிட்டோர்.
பகிர்:

திருப்பூர்: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உணர்ச்சிகளை  மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களின் மூலமாக 28 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்றுகூட ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு அதைக் கைவிட மறுத்து அடம்பிடித்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உணர்ச்சிகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் மாணவர்கள் தேர்வினை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது.

என்ன செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா கூறுகிறார். இவர் மத்திய அமைச்சர் போல தன்னை நினைத்துக் கொண்டு பேசுகிறார். தமிழகத்தின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார்.

மத்திய அரசு 6 லட்சத்து 70 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக பொது நிறுவனங்களை மூடுவதற்கான ஏற்பாடாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தான் சாதகமாக அமையும். கார் தொழிற்சாலை மூடுவது என்பது அதன் நிர்வாகம் மட்டுமே எடுக்கும் முடிவு கிடையாது. மத்திய அரசின் ஒப்புதலும் தேவைப்படும்.

தற்போது தொழிற்சாலை மூடப்படுவதால் 40 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் பஙகேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்ய அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தவறி விட்டார்.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை திருப்பி அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் மத்திய அரசு அதனை நிராகரிக்க முடியாது. அதை அதிமுக செய்யவில்லை. திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆகவே, அடுத்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →