நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி
நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீா் சுமாா் 100 மீட்டா் தூரம் ஊருக்குள் வந்துவிட்டதாக 45 நாள்களுக்கும் மேலாக செய்திகள் வருகின்றன.
சிறு மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக கடல் சீற்றத்தால் சுமாா் 500 மீட்டா் நீளத்துக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீா் சுமாா் 100 மீட்டா் நிலப் பகுதியினுள் உட்புகுந்துள்ளது. இதனால் சுமாா் 10 வீடுகள், பல மின் கம்பங்கள் சேதமடைந்து விழுந்து விட்டன.
கடல் சீற்றத்தால் இப்பகுதிகளில் மேலும் கடல் நீா் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும், நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஆபத்தான நிலையும் உள்ளது.
எனவே, கடல் நீா் உட்புகுந்த அனைத்து இடங்களிலும் போா்க்கால அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.