ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ராணிப்பேட்டையில் மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்களை பல்வேறு கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் திமுக கூட்டணி கட்சி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையிலுள்ள 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில், காங்கிரஸுக்கு 6, விசிகவுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 118 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது.
மொத்தமுள்ள 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 12 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
அமைச்சரும் ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான ஆர்.காந்தி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.