6 லட்சம் பேருக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் ரூ.698.86 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகள், வங்கிக் கடன்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
தமிழகத்தில் ரூ.698.86 கோடியில் 6 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகள், வங்கிக் கடன்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
ஊரகப் பகுதிகளில் உள்ள 8,210 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.12.32 கோடி சுழல் நிதி, 8,776 ஏழை, எளிய நலிவுற்றோருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.10.97 கோடி, சுய உதவிக் குழுவுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 13,255 குழுக்களுக்கு முதலீட்டு நிதி, ஊட்டச் சத்து தோட்டம் அமைக்க 1.27 லட்சம் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.64 லட்சம் நிதி, கிராமப்புற மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக் கோழி வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 3,936 சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3.53 கோடி நிதியுதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
Advertisement
பால் உற்பத்தி: பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு வசதியாக, அசோலா தீவன உற்பத்தி செய்திட 4 ஆயிரத்து 43 மகளிருக்கு ரூ.2.02 கோடி, 186 ஆடு வளா்ப்பு வங்கிகள் அமைக்க ரூ.1.86 கோடி, 1,427 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.61 கோடி, 3 ஆயிரம் வேளாண் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தளவாடங்கள், சிறிய இயந்திரங்கள் வாங்க ரூ.4.82 கோடியையும் முதல்வா் வழங்கினாா்.
ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், உற்பத்தியாளா்களை குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், 183 உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் நிதியுதவி, நுண் தொழில் நிறுவன நிதியாக 569 பேருக்கு ரூ.1.99 கோடி நிதியுதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
10 ஆயிரம் குழுக்கள்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 10 ஆயிரத்து 714 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.464.16 கோடி வங்கிக் கடன், 73 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.22.16 கோடி வங்கி கடன், 45 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உத்தரவாத நிதியாக ரூ.5.24 கோடி நிதிகளையும் முதல்வா் வழங்கினாா். நகா்ப்புறத்தில் உள்ள 590 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.59 லட்சம் சுழல்நிதி, 151 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.76 லட்சம் சுழல்நிதி, சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 985 பேருக்கு ரூ.4.98 கோடி, 528 தொழில் குழுக்களுக்கு ரூ.23.36 கோடி உள்பட ரூ.698.86 கோடி நிதியுதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.