முகப்பு
தமிழ்நாடு

காந்தியடிகளின் நேர்மையே மக்களை ஈர்த்தது: உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி

காந்தியடிகளிடம் உள்ள நேர்மையே பல்லாயிரக்கணக்கான மக்களை அவரை நோக்கி ஈர்த்தது என்று உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி பேசினார்.

Updated On : 23 செப்டம்பர் 2021, 3:50 am IST
பகிர்:

மதுரை: காந்தியடிகளிடம் உள்ள நேர்மையே பல்லாயிரக்கணக்கான மக்களை அவரை நோக்கி ஈர்த்தது என்று உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி பேசினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சார்பில், காந்தியடிகளின் ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. காந்தி அருங்காட்சியக கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் தலைவர் ம.மாணிக்கம் தலைமை வகித்தார். விழாவில் ஆடைப்புரட்சி நூற்றாண்டு மலரை உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி வெளியிட, புதுதில்லி காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் குமார் பிரசாந்த் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் நீதிபதி பி.புகழேந்தி பேசியது: நூறாண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி மதுரை மக்களின் நிலையக் கண்டு தனது ஆடையையும் அரையாடையாக மாற்றிக் கொண்டார். ஆடையை மாற்றிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு மிகுந்த மன உறுதியும், வலிமையும் வேண்டும். காந்தியடிகளிடம் அந்த மன உறுதியும், வலிமையும் மிகுதியாக இருந்தது.
உலக எல்லைகளைத் தாண்டி காந்தியடிகள் மதிப்பான மனிதராகத் திகழ்ந்தார் என்றால் அதற்கு காரணம் அவரிடம் உள்ள நேர்மை, எளிமை. காந்தியடிகள் வாழ்நாள் முழுவதும் எளிமையானவராகவும், நேர்மையாளராகவும் திகழ்ந்தார். அவரிடம் உள்ள நேர்மைதான் மதுரை வரும்போது பல்லாயிரக்கணக்கான மக்களை அவரை நோக்கி ஈர்த்தது. நூறாண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், காந்தியடிகளின் வருகையறிந்து மக்கள் திரண்டார்கள் என்றால் அவரிடம் உள்ள உண்மைதான் காரணம். நாம் மாற்றத்தை உண்டாக்குவதை விட உண்மை, நேர்மையைக் கடைப்பிடித்தால் மாற்றம் இயல்பாக வரும். இளைய தலைமுறையினர் காந்தியடிகளிடம் இருந்து நேர்மை, எளிமை, உண்மை ஆகியவற்றை செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
காந்தியடிகளின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா பேசியது: மகாத்மா காந்தி ஆடையில் செய்த புரட்சியின் நூறாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நாளில் மதுரையின் பெருமையை உலகமே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. மதுரையின் மீதும், தமிழின் மீதும் எனக்கு எப்போதுமே பற்று உண்டு. நான் சிறுமியாக இருந்தபோது எனது தாத்தாக்களான காந்தியடிகளும், ராஜாஜியும் என்னிடம் தமிழின் பெருமை குறித்தும் தமிழர் கலாசாரம் குறித்தும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் விவசாயிகள், ஏழைகளின் துயரத்தைப் பார்த்த காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறினார். அவர் காவி நிறத்தை தேர்ந்தெடுக்கவில்லை, அவர் எளிமையை மட்டுமே தேர்ந்தெடுத்தார். 1947- இல் இந்தியாவுக்கு கிடைத்தது அரசியல் விடுதலை மட்டுமே. ஆனால், இன்னும் பல்வேறு விடுதலைகளுக்காக நாம் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
நீர் மனிதர் ராஜேந்திர சிங் பேசியது: நீர், காற்று உள்ளிட்ட இயற்கை அனைவருக்கும் பொதுவானது. இயற்கையோடு இணைந்த வாழும் வாழ்க்கை குறித்து காந்தியடிகள் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாக இருந்துள்ளது. இயற்கை நியதியை மறந்து விட்டதால் தற்போது உலகம் லாபம் ஈட்டும் பொருளாக மாறி வருகிறது. தற்போது உருவாகி வரும் பெரு வணிகம் குறித்து காந்தியடிகள் 1909-லேயே தெரிவித்துள்ளார். இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு திரும்புவதுதான் காந்தியடிகளுக்கு செலுத்தும் மரியாதை ஆகும் என்றார்.
முன்னதாக தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் அ.அண்ணாமலை வரவேற்புரையாற்றினார்.
இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், மத்திய காந்தி நினைவு நிதிச் செயலர் சஞ்சய் சின்ஹா, குஜராத் வார்தாவில் உள்ள நையிதாலிம் சமிதி தலைவர் சுஹான் பரத் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சியின் முடிவில் காந்தி அருங்காட்சியகச் செயலர் கே.ஆர்.நந்தாராவ் நன்றி யுரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.