சென்னை: தில்லியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னை ராயபுரத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 4 டன் போதைப் பாக்குகளை வணிக வரித்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த விவரம்:
தில்லியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்திற்கு போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக தமிழக வணிக வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வணிக வரித்துறையினர் ராயபுரம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வந்த சரக்குகளை தணிக்கை செய்தனர்.
இதையும் படிக்க | களியக்காவிளை காவல்துறை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை: கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்
அப்போது, புதன்கிழமை அதிகாலை வந்த ஒரு சரக்கு ரயிலில் இருந்து போதை பாக்கு பொட்டலங்கள் இறக்கப்பட்டு லாரிகளிலும், சுமை ஆட்டோக்களிலும் ஏற்றப்படுவதை பார்த்தனர்.
இதையடுத்து அந்த போதை பாக்கு பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், மொத்தம் 4 டன் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பாக்கை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.