காங்கயம்: தொழிலதிபர் மகன் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 ஆவது நபரையும் தனிப்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 ஆவது நபரையும் தனிப்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே அரிசி சாலை நடத்தி வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மகன் சிவபிரதீப் (22). இவர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கார் ஓட்டுநரான சதாம்உசேனுடன் (27) சென்றபோது அவர்களை 7 பேர் கும்பல் கைகளை கட்டிப்போட்டு இருவரையும் கடத்திச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து ரூ.3 கோடி கேட்டு மிரட்டினர். மேலும், பணம் தராவிட்டால் சிவபிரதீப்பை கொன்று புதைத்து வீசுவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவருடைய மாமா ஆகியோர் அன்று இரவு 7.30 மணியளவில் அந்த கும்பல் கூறிய குறிப்பிட்ட இடத்துக்கு சென்று ரூ.3 கோடி கொடுத்தனர். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட கும்பல் சிவபிரதீப், சதாம் உசேன் ஆகியோரை விடுவித்து விட்டு தலைமறைவானார்கள்.
இதை தொடர்ந்து காங்கயம் தனிப்படையினர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட திண்டிவனம் குலமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (37), மதுரையை சேர்ந்த அகஸ்டின்(45), ஆந்திர மாநிலம், நெல்லூர் எ.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த பாலாஜி(38) ஆகியோரை மதுரையில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த பசீர் (32), கிருஷ்ணகிரி பழைய பேட்டை முகமது கவுஸ் சாகிப் பாயு தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா(45), திண்டுக்கல் மாவட்டம், பழனி, கீரனூர் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்(37) ஆகியோரை கைது செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 7 பேரில் 6 பேரைக் கைது செய்திருந்தனர்.
படிக்க | காங்கேயம்: தொழிலதிபர் மகன் கடத்தல் சம்பவத்தில் மேலும் இருவர் கைது: மொத்தம் ரூ.2.50 கோடி மீட்பு
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த பாலன் என்பவரை தனிப்படையினர் புதன்கிழமை கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரையும் 3 நாளில் தனிப்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.