அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என்றும், பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள பணிமனையில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள்.
Advertisement
இதைக் கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.
தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 7.15 மணியளவில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினார்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ந்த இப்போராட்டத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.