முகப்பு
இந்தியா

நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை...

Updated On : 17 ஏப்ரல் 2026, 3:30 pm IST
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - SANSAD
பகிர்:

தொகுதி மறுவரையறை மூலம் நாட்டின் வரைபடத்தையே மாற்ற பாஜக முயற்சிப்பதாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியதாவது:

Advertisement

Advertisement

”நமது நாட்டின் மையப் புள்ளியே பெண்கள்தான். இந்த அவையில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையில் தாய், சகோதரி, மனைவி என பெண்களிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டிருப்பார்கள். எனது 20 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பேசாததை எனது சகோதரி நேற்று 5 நிமிஷங்களில் நிகழ்த்தினார். அண்ணனாக பெருமையாக இருக்கிறது.

இது மகளிருக்கான மசோதா அல்ல. 2023 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதுதான் மகளிருக்கான மசோதா. இது நாட்டின் தேர்தல் வரைபடத்தையே மாற்றும் முயற்சியாகும். அதனை மகளிர் மசோதாவுக்கு பின்னால் வைத்து செய்கிறார்கள். சொல்லப் போனால், இது ஒரு வெட்கக்கேடான செயல். தொகுதி மறுவரையறை இல்லாமல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மட்டும் கொண்டு வாருங்கள் இந்த நொடியே அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிக் காட்டுகிறோம். ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா ஒருபோதும் நிறைவேறாது.

இந்திய சமூகம் தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் எவ்வாறு நடத்தியது என்பது வரலாற்று உண்மை. தற்போது செய்ய முயற்சிப்பது சாதவாரிக் கணக்கெடுப்பை தவிர்ப்பதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சகோதரிகளிடமிருந்து அதிகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்.

மக்களவையைவிட மனுஸ்மிருதி மேலோங்கி நிற்கிறதா? சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டதாக அமித் ஷா கூறுகிறார். அவையில் சாதி கிடையாது என்று சாமர்த்தியமாகப் பேச முயன்று, அவர் அக்கூற்றை இருமுறை வலியுறுத்திக் கூறினார். தற்போதைய கேள்வி என்னவென்றால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் அளிக்கப்படும் பிரதிநிதித்துவத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் பயன்படுத்தப்படுமா? இல்லையா? என்பதுதான். ஆனால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு அளிக்கப்படவுள்ள பிரதிநிதித்துவத்திற்கும், இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நீங்கள் சித்திரிக்க முயன்று கொண்டிருக்கிறீர்கள்.

நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளைக் கண்டு பயந்து, உங்கள் பலம் குறைந்து வருவதைக் கண்டு பயந்து நீங்கள் தற்போது ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். நாட்டின் வரைபடத்தையே மாற்றியமைக்க நீங்கள் முயன்று வருகிறீர்கள். அஸ்ஸாம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் நீங்கள் இதைச் செய்தீர்கள். தற்போது நாடு முழுவதும் இதைச் செய்துவிட முடியும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதைச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.

பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்காக, உங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறித்துக்கொள்ளப் போகிறோம் என்று தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் மற்றும் நாட்டின் சிறிய மாநிலங்களிடம் நீங்கள் கூறுகிறீர்கள். இது தேசவிரோதத்துக்குச் சற்றும் குறைவானதல்ல. இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

summary

Leader of the Opposition Rahul Gandhi's speech in the Lok Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.