முகப்பு
தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடி சொத்து: சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ரூ. 27.22 கோடி மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28 இடங்களில் சோதனை

Updated On : 18 அக்டோபர் 2021, 3:48 pm IST
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அ்மைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட 28 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் 30 குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை சோதனை, நடத்தினர்.

முன்னாள் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை (அக். 17) வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம், மேட்டுச்சாலையிலுள்ள மதர் தெரசா கல்வி நிறுவனங்களில் 10 இடங்கள், மதர் தெரசா அறக்கட்டளை அலுவலகம், திருவேங்கைவாசல், முத்துடையான்பட்டி ஆகிய இடங்களிலுள்ள கல் குவாரிகள், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இலுப்பூர் பாண்டிசெல்வம், குரு. ராஜமன்னார், மதியநல்லூர் அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் வி. ராமசாமி,  மெய்யனம்பட்டி வடிவேல், பழனிசாமி, சிப்காட் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, கோவில்பட்டியில் அதிமுக புதுக்கோட்டை நகரச் செயலர் க. பாஸ்கர், அவரது தம்பி நத்தம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, விஜயபாஸ்கரின் உதவியாளர் நரிமேடு அன்பானந்தம், புதுக்கோட்டை தெற்கு 3ஆம் வீதியில் எஸ்ஏ. சேட்டு, இலுப்பூர் சிவன்கோவில் தெரு குபேந்திரன், இலுப்பூர் சௌராஷ்டிரா தெரு சுப்பையா உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் நுழைந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், உள்ளே இருந்த யாரையும் வெளியே அனுப்பாமல் வைத்து சோதனையை மேற்கொண்டனர்.

இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் விஜயபாஸ்கரின் தந்தை ரா. சின்னதம்பி, தாய் அம்மாகண்ணு, விஜயபாஸ்கரின் அண்ணன் சி. உதயகுமார் உள்ளிட்டோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது, மாவட்டக் காவல் துறையினரும் ஆங்காங்கே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வழக்கு விவரம்:

புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் பீட்டர் அளித்த புகாரின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் பதிவு செய்துள்ள வழக்கு விவரம்;

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலத்தில் ரூ. 27,22,56,736 மதிப்பில் பல்வேறு இடங்களில் சொத்துகளாக வாங்கியுள்ளனர்.

ராசி புளு மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹைடெக் புரமோட்டர்ஸ், ஓம்சிறீவாரி ஸ்டோன்ஸ் நிறுவனம், ராசி என்ட்டர்பிரைசஸ், அனையா என்டர்பிரைசஸ், பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.