புது தில்லி: எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை என்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் புது தில்லி பயணம் குறித்து, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
தமிழகத்தின் நலனை முன்னிறுத்தியே முதல்வர் மு.க. ஸ்டாலின் புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும், தில்லியில் முதல்வருக்குக் கிடைத்த வரவேற்பால் பழனிசாமிக்கு பொறாமை என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மு.க. ஸ்டாலின் புது தில்லி சென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தன்னை காப்பாற்றிக் கொள்ள முதல்வருக்கு எந்தத்தேவையும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த போது ஒவ்வொரு முறையும் தன்னைக் காப்பற்றிக் கொள்ளத்தான் தில்லி வந்தார். ஒவ்வொரு முறை தில்லி சென்ற போதும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நலனை அடகுவைத்துள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பாதுகாப்புத் துறை அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் கம்பீரமாகச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, எப்படி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் என்பதைத்தான் பார்த்தோமே என்றும் அவர் தெரிவித்தார்.