கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு செய்த முதல்வர்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலத்தில் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 1 கோடியே 5 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பகுப்பாய்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிக்க- கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: விஜயகாந்த்
மேலும், எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் திரு.வி.க நகர் மண்டலத்தில் தீட்டித்தோட்டம் முதல் தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் மூலம் 53 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கொளத்தூர், வீனஸ் நகர், செல்வி நகர் மற்றும் டெம்பில் பள்ளி பகுதியில் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உள்வட்டச் சாலையில் வீனஸ் நகர் மற்றும் டெம்பில் பள்ளி பகுதிகளில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், பல்லவன் சாலையில் மூலதன நிதியில் 49 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பகுப்பாய்வு மையம் மற்றும் ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மூலதன நிதி மூலமாக 55 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ், 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்
மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல்வர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்கள், கல்வி உதவித் தொகை, பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, ஆட்டோ, செயற்கை கால், மாவு அரவை இயந்திரம், மீன்பாடி வண்டி, 4 சக்கர தள்ளு வண்டி, திருமண உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, கொளத்தூர், லூர்து மேல்நிலைப் பள்ளியில், அனிதா அகாடமியில் பயிற்சி முடித்த 223 மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர் திரு. மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.