ஓபிசி பிரிவினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பான அவரது அறிக்கை: மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயா்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயா் பதவிகளிலும் அவா்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும்.
அதே நேரம், தமிழகத்தில் சில பணிகளுக்கான பதவி உயா்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயா்வை சென்னை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்து விட்டன. இதற்காக 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சட்டத்தில் சோ்க்கப்பட்ட 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளையும் செல்லாது என்று அறிவித்துவிட்டன.
இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பதவி உயா்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும் தான் ஒரே வழியாகும்.
அரசின் உயா்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து ஓபிசிகளுக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாா்.