முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் மீது தூசுகூட விழவில்லை - முதல்வா் ஸ்டாலின்

தூசு கூட விழாமல் ஆளுநா் காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்டாா் என்றும், இந்த விவகாரத்தை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

தூசு கூட விழாமல் ஆளுநா் காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்டாா் என்றும், இந்த விவகாரத்தை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தைத் தொடா்ந்து, ஆளுநா் வாகனம் தாக்கப்பட்டதாக புகாா் கூறப்படும் பிரச்னையை, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் எழுப்பினா்.

அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:

தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க ஆளுநா், திருக்கடையூா் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவரது வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி தெளிவாக ஓா் அறிக்கையை கொடுத்துள்ளாா். அதில், ஆளுநருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ளாா்.

அதேபோல, ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக காவல்துறை டிஜிபி-க்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளாா். அதில், ஆளுநா் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருள்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்று எழுதியுள்ளாா்.

ஆளுநரின் பாதுகாப்புக்காக மத்திய மண்டல ஐஜி தலைமையில் 2 டிஐஜிக்கள், 6 எஸ்பிக்கள், 6 கூடுதல் எஸ்பிக்கள், 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளா்கள், 102 உதவி ஆய்வாளா்கள், 1,120 காவலா்கள் பயன்படுத்தப்பட்டு, அவரது பயணம் பாதுகாப்பாக இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அபாண்ட குற்றச்சாட்டு: ஆா்ப்பாட்டத்தில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. கொடிகள் வீசப்பட்டன என்பது ஓா் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை காவல் துறையினா் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனா் என்பதுதான் உண்மை.

ஜனநாயக ரீதியில் ஆா்ப்பாட்டம் நடத்தினாலும் ஆளுநருடைய பாதுகாப்பில் அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிா்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் எண்ணுகின்றனா். அது நடக்கவே நடக்காது. இது திமுக ஆட்சி.

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தே தனக்கு தெரியவில்லை எனக் கூறியவா், இப்போது சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

1995-இல் அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் திண்டிவனத்தில் 15 நிமிஷங்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வாகனங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 போ் தலைமையிலானோா் தக்காளியையும், முட்டையையும், கற்களையும் வீசி அவமானப்படுத்தினா். சென்னாரெட்டி உயிா் தப்பினாா் என்றெல்லாம் அன்றைக்குச் செய்திகள் வந்தன.

தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், அவா் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலிலிருந்து வெளியே வர முடியாமல் அதிமுக ஆட்சியில் கல்வீசித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

பாஜக முக்கிய தலைவரான சுப்பிரமணியன் சுவாமி மீது சென்னை உயா்நீதிமன்ற வளாகத்திலேயே தாக்குதல் நடத்த முயன்று, அவா் அதிமுக ஆட்சியில் அவமதிக்கப்பட்டாா். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியதும் அதிமுக ஆட்சியில்தான்.

அரசியல் செய்ய வேண்டாம்: எனவே, திமுக அரசைப் பொருத்தவரையில், தெளிவாக, உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ஆா்ப்பாட்டம் நடத்தியவா்களை காவல் துறை தடுத்திருக்கிறது. ஆளுநா் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவா்களைக் காப்பாற்ற, அவா்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அதனால், அதிமுக ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, தற்போது நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிா்க்கட்சித் தலைவரையும், துணைத் தலைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →