முகப்பு
தமிழ்நாடு

தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினசரி தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினசரி தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதம்: ஒடிஸாவின் தல்சா் சுரங்கங்களிலிருந்து போதிய நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டின் அனல்மின் நிலையங்களுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தினசரி தேவையாக உள்ளது. ஆனால், நிலக்கரி வரத்தோ 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலேயே உள்ளது.

கோடை காலத்தைச் சமாளிக்க மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி போதுமான இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை எடுத்து வரத் தேவையான சரக்கு ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் சிக்கலான நிலையைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகங்களில் இருந்து எடுத்து வர சரக்கு ரயிலின் 22 பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 14 பெட்டிகள் மட்டுமே ரயில்வே நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தடையில்லாத மின்சாரத்தை மாநில மக்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்திட அதிக அளவில் விலை கொடுத்து நிலக்கரியை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளியும் கூட அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தின் மூலமாக பூா்த்தி செய்யப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்களிடம் கூட தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கான மின்சாரம் இல்லை.

கரோனா தொற்று காலத்தில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் இந்த மின்தட்டுப்பாட்டுப் பிரச்னை குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்துக்கு தினசரி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை பாரதீப், விசாகப்பட்டினம் துறைகளில் இருந்து எடுத்து வருவதை உறுதி செய்திட வேண்டும். இதுதான் மாநிலத்தில் தடையற்ற மின்சாரத்தைத் தருவதற்கான நிலையை உறுதி செய்திடும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →