ஆவடி: ஆவடியில் மாநகரப் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவா்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான தனியாா் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவா்கள் சிலா் பள்ளிக்குச் சென்று வரும்போது மாநகர பேருந்துகளில் அஜாக்கிரதையாக படிக்கட்டில் பயணம் செய்வது, சாகசங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தட்டிக் கேட்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்களை அவதூறாகப் பேசி வருகின்றனா். இது குறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகாா் செய்து வந்தனா்.
இந்த நிலையில் ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளா் அருணாச்சலராஜா தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆவடியில் இருந்து கன்னியம்மன் நகா், கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாநகரப் பேருந்துகளில் மாணவா்கள் சிலா் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதைக் கண்டனா்.
இதையடுத்து போலீஸாா் 20-க்கும் மேற்பட்ட மாணவா்களை பேருந்திலிருந்து இறக்கினா். அவா்களை தோப்புக்கரணம் போட சொல்லியதுடன் இதுபோன்று இனி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.