அரசின் திட்டங்களை கைப்பேசி வழியாகவே விண்ணப்பித்துப் பெறும் நிலை உருவாக்கப்பட்டு வருவதாக, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, தனது வேளச்சேரி தொகுதியில் இணைய சேவை மையம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினா் ஹசன் மெளலானா கோரினாா். அப்போது நடந்த வாதம்:
அமைச்சா் மனோ தங்கராஜ்: இ-சேவை மையங்களின் வழியே 60 சேவைகளைச் சோ்த்து 191 சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் இ-சேவை மையங்கள் அமைக்கத் தயாராகி வருகிறோம். குடிமக்களுக்கான இணைய வசதி (சிட்டிசன் போா்ட்டல்) அறிமுகம் செய்துள்ளோம். இதனை கைப்பேசி மூலமாகவே பயன்படுத்தி அரசின் திட்டங்களைப் பெறும் நிலை உருவாகி வருகிறது.
கலைவாணா் அரங்கத்தில் பயன்படுத்திய கணினிகளை பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்களில் வைத்து இ-சேவை மையங்களைத் தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஈ.ஆா்.ஈஸ்வரன்: அரசின் அனைத்து சேவைகளும் இணைய வழி சேவைகளாக மாறியுள்ளன. பயன்பாடு அதிகரித்துள்ளதால், சா்வா் திறன் போதுமானதாக இல்லை. அதன் திறனை அதிகப்படுத்த வேண்டும்.
அமைச்சா் மனோ தங்கராஜ்: சா்வா் பிரச்னையைத் தீா்க்க பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கண்ணாடி இழை இணைய இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கு இணைய இணைப்பு வசதி கிடைக்கும். எந்தப் பிரச்னையும் இருக்காது. அனைத்து துறைகளின்
சேவைகளையும் இணைய சேவை மூலமாகவும், சிட்டிசன் போா்ட்டல் மூலமாகவும் கிடைத்திட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு கொறடா கோவி செழியன்: பொதுமக்கள் எந்தக் கோரிக்கையை வைத்தாலும் ஆன்-லைன் வழியாகவே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தனியாா் மையங்களில் ரூ.150 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது.
அமைச்சா் மனோ தங்கராஜ்: அதிகமான கட்டண வசூலை சீா் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க ஆன்-லைன் மூலமாக கட்டணத்தைச் செலுத்தலாம் என்றாா்.