முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கோரிய வட்டாட்சியா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் வட்டாட்சியா் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை வரை வட்டாட்சியா் நீதிமன்றத்தில் இருக்க உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் வட்டாட்சியா் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை வரை வட்டாட்சியா் நீதிமன்றத்தில் இருக்க உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமத்தில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவா் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் 2018-இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி அமா்வு, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை குற்றவாளி என அறிவித்தது. மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக அவரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரப்படி பெண் வட்டாட்சியா் லலிதா உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா். நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா். அப்போது அரசுத் தரப்பிலும், ஆக்கிரமிப்பை 3 வாரங்களில் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பெண் வட்டாட்சியருக்கு கடுமையான தண்டனை விதிக்காமல் வெள்ளிக்கிழமை மாலை நீதிமன்ற நேரம் முடியும் வரை நீதிமன்றத்தில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டனா். மேலும் மூன்று வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →